வியாழன், 25 செப்டம்பர், 2008

தமிழ் பேச வெட்கமா!?

"தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்.." என்று கவிஞர் பாரதிதாசன் பாடியிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.


மகாகவி சுப்பிரமணிய பாரதி

நாம்
பிறந்தது தமிழ் தாயின் மடியில்! அவள் பேசும் அந்த தமிழில்தான் எத்தனை சுவை! எத்தனை இன்பம்! தமிழ் மொழி பேசுவதால், படிப்பதால் நமக்கு மட்டும் பெருமை இல்லை; மாறாக நம்மை ஈன்ற தமிழ் தாய்க்குத்தான் பெருமை.

பல சிறப்புகள் உள்ளடங்கியுள்ள தமிழ் மொழியின் அருமையை உணராதவர்களும் இப்புவியில் இருக்கிறார்கள் என்பதை அறியும் போது தமிழுள்ளங்களின் நெஞ்சம் குமறதான் செய்கிறது. ஒரு சிலர் நன்கு தமிழ்ப் பேசத் தெரிந்தாலும் "எனக்கு தமிழ்ப் பேசத் தெரியாது ", என்றுக் கூறிக் கொள்வதில் ஒருவகை பெருமிதம் கொள்கின்றனர். மேலும் தமிழ்ப் பேச வெட்கப் படுவோரும் உண்டு. தாங்கள் தமிழர்கள் என்பதையே மறந்து ஆங்கிலத்தில் சொற்களை அள்ளி வீசுவோரும் உண்டு. இதனைக் காணும்போது சொந்த தாயே மறந்துவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

"கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்று பொய்யா மொழி புலவர் கூறியுள்ளார். தெவிட்ட தேனைப் போல தமிழ் இருக்க, ஆளுமைக் குணம் கொண்ட ஆங்கிலேயர்களின் மொழி எதற்கு? கனியை தமிழ் இருக்க , கையான ஆங்கிலம் ஏன் நம்மவர்களை கவர்கின்றது? படித்தவர்களே தமிழைப் படிக்க நானும் போது பாமரர்கள் என்ன செய்வார்கள்? இன்னும் சிலர் ஒரு படி மேல் சென்று
" எனக்கு கொஞ்சம் கொஞ்சம்தான் தமிழ் தெரியும் " என்று தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்துப் பேசி தாய் மொழியையே இழிவுப் படுத்துகின்றனர்.

பன்மொழிப் புலவரான பாரதியே "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல இனிதாவது எதுவும் இல்லை" என்றுக் கூறியுள்ளார். ஆனால், இத்தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மக்களோ நாகரீக மோகத்தில் தமிழின் அருமை பெருமை அறியாது அதனை மறுக்கிறார்கள் ;மறக்கிறார்கள்;வெறுக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல், தமிழ்ப் பேசுபவர்களைக் கண்டால் ஏதோ ஒருவகை ஏளனம் அவர்களது கண்களில் தெரிகின்றது. இன்றைய காலத்தில் தமிழ் பேசுபவர்களை எளிதில் விரல் விட்டு எண்ணி விடலாம். "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என வாழ்பவர்கள் இனி இல்லை என்றே சொல்லும் நிலையை அடைந்திருக்கிறது.

கல் தோன்றி மண் தோன்றாது காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி , அப்படியொரு நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழியைப் பேச நாம் பெருமைக் கொள்ள வேண்டும்.

"வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்"

என்று வாயளவிற்கு மட்டும் கூறிக் கொண்டிருக்காமல் நமது அன்றாட வாழ்வில் தமிழ் மொழிக்கு ஒரு சிறப்பு இடத்தை அளித்து முன்னோடியாக கொள்ள வேண்டும். பிற மொழிக்கு வழங்கும் முக்கியத்துவத்தை தாய் மொழிக்கும் வழங்கி ஒரு உண்ணத நிலையை அடைய தமிழர்களாகிய நாம்தான் பாடு பட வேண்டும்.

இறுதியாக, எக்காலத்திற்கும் பொருந்தும் செம்மை மொழியான தமிழ் மொழியின் சுவையினை அனைவரும் ருசித்து பயனடைய வேண்டும். அதோடு, தமிழ் மொழி தாழ்ந்து போகாமல், தழைத்து வாழ நாம் அரும்பாடு படு எனக் கூறி விடை பெறுகிறேன்.

"முதலில் தோன்றிய மனிதன் தமிழன்
முதல் மொழி தமிழ் மொழி-அதுதான்
எங்கள் தாய் மொழி"


ஆக்கம்: ஷாலினி நடராஜன்
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

3 கருத்துகள்:

ஆதவன் சொன்னது…

தாய்மொழி வலைப்பதிவு தமிழ்மொழிக்குச் சேவையாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. தாய்தமிழை முன்னெடுப்பது ஒன்றே தமிழர் நாம் செய்யவேண்டிய முதல் பணியும் கட்டாயப் பணியுமாகும்.

இளையர்கள் சிலர் ஒன்றுகூடி நடத்து இந்த வலைப்பதிவு சிறக்கட்டும் செழிக்கட்டும்.

தமிழ், தமிழர் சார்ந்த செய்திகளை நிறையத் தேடிப் படியுங்கள். படித்ததை உங்கள் சொந்தக் கோணத்தில் எழுதுங்கள், பரப்புங்கள்.

உங்கள் கல்விக் கழகத்தைச் சேர்ந்த பலர் ஒன்றிணைந்து இடுகைகளை எழுதுகின்றீகள். மகிழ்ச்சி. நல்ல முயற்சி. புதுமை முயற்சி.

உங்களுடைய மொழி ஆளுமையில் சற்று கவனம் வையுங்கள். தமிழில் எழுதும்போது முடிந்தவரையில் பிறமொழிகளைக் கலவாமல் (சமசுகிருதம் உள்பட) எழுதப் பழகிக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் தமிழுக்கு பெரும் நன்மை ஏற்படுவது மட்டுமல்ல, காலப்போக்கில் உங்களுடைய தமிழ் ஆற்றலும் தூய்மயான நிலையில் வளரும்.

இளையர்கள் உங்களின் இந்த இணையத் தமிழ்ப்பணியைத் தொடருங்கள். கல்விக் காலம் முடிந்ததும் இதனை அப்படியே விட்டுவிடாமல் யாராவது ஒருவர் தொடர்ந்து வழிநடத்துங்கள்.

தமிழ், தமிழர் தொடர்பான சிக்கல்களை மக்கள் பார்வைக்கு கொண்டுவரும் தளமாக எமது 'தமிழுயிர்' வலைப்பதிவு செயல்படுகிறது. சமுதாயத்தில் நடக்கும் தமிழ்க் கேடுகளைத் தட்டிக்கேட்கும் தமிழுயிருக்கும் நீங்களும் பங்களிக்கலாம்.

நன்றி.

கோவி.மதிவரன் சொன்னது…

வணக்கம் வாழ்க வளத்துடன்.

தங்கள் வலைப்பதிவினைக் கண்டேன் . நல்ல முயற்சி. தமிழ் மொழியைத் தொடர்ந்து காப்பதற்கு தாங்கள் மேற்கொள்ளும் பணி சிறக்க வாழ்த்துகள். அதுவும் ஆசிரியர் பயிற்சிக் கழக மாணவர்கள் ஈடுபடுவது பாரட்டுக்குரிய ஒன்று.

தொடர்ந்து தமிழுக்கு வினையாற்றுங்கள்

அன்புடன்
கோவி.மதிவரன்
தொல்லூர்

பெயரில்லா சொன்னது…

சாலினிக்கு பாராட்டுக்கள்...
தமிழ்மொழியை பேச வெட்கப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...அப்படி என்னுபவர்களுக்கு ஒரு வரி கூற ஆசை படுகிறேன்...
தமிழ்மொழி நம் கண்கள் போன்றது,மாறாக ஆங்கிலம் நம் கண்ணாடி போன்றது.
நாமே கலற்ற நினைத்தாலும் நம் கண்களைக் கலற்ற முடியாது!!!
தேவை படும்போது மட்டும் கண்ணாடியை அணிந்தால் தமிழுக்கு என்றுமே இழுக்கு வராது!!!